Tuesday, August 30, 2011

நேர்மையின் அவதாரம் - கலெக்டர் சகாயம் அதிசயங்கள்

 “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!’

இணையத்தில் சென்று சகாயம் என்று சொடுக்கினாலே அவரின் புகழ் பாடுகின்றன அனைத்து தளங்களும் வலைப்பூக்களும். அவரின் சாதனைகளையும் அவர் சந்தித்த சோதனைகளையும் நான் இணையத்தில் படித்த செய்திகள் மூலம் இங்கே பகிர்கிறேன்.

கலெக்டர் சகாயம் - என்று சொன்னாலே மதுரையில் பரபரப்பு பற்றி கொள்கிறது. (பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல).  நாமக்கல் முழுவதும் அவரின் புகழ் பாடியே மகிழ்கிறது.  நாமும் ஒருபுறம் சட்டை காலரை தூக்கி விட்டு கொள்ளலாம்.( அட நம்ம ஊருகாரருப்பா).

 புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் பிள்ளை  என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். கலெக்டர் ஆகும் லட்சியத்துடன் யு.பி.எஸ்.சி  தேர்வு எழுத கனவு கைகூடாத நிலையில், தான் ஏற்கனவே எழுதி இருந்த டி.என்.பி.எஸ்.சி. , குரூப்-1  தேர்வில் தேர்ச்சி பெற்று துணை கலெக்டர் ஆனார் சகாயம்.


    அன்றைய நாளிலிருந்து அவர் கடந்து வந்த பாதை மிகவும் பெரியது.  தன்னுடைய நேர்மையின் பலனாய் அவர் பெற்றது இடம்  பதவி மாற்றங்களும்தான்.  இவர் நேர்மையாய் இருந்த காரணத்தால் அவர்
பெற்ற எதிர்ப்புகளை அவரின் பணிபுரிந்த இடங்களின் பட்டியலில் இருந்து அறியலாம்.

தர்மபுரியில் பயிற்சி கலெக்டர்
நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ.,
திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது),
 கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி,
 காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,
 திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர்,
 கோவை கலால் பிரிவு துணை கமிஷனர்,
 சென்னை, டி.ஆர்.ஓ.,
 தொழில் வணிகத்துறை இணை இயக்குனர்,
 மாநில தேர்தல் ஆணைய செயலர்,
 நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர்,
 நாமக்கல் மாவட்ட கலெக்டர்,
 புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர்,
 மதுரை கலெக்டர்.


கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசுப் பணியில் சேர்ந்த சகாயத்திற்கு , கடந்த 2001 -ம் ஆண்டு ஐஏஎஸ் அந்தஸ்து தேடி வந்தது.

அவரின் உரையிலிருந்து:

*ஒவ்வொரு அரசுப் பணியாளரும் தங்களது சொத்துக்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்பது பொதுவான விதி. நான் அதையும் தாண்டி, எனது சொத்து விவரத்தை மக்களுக்கும் சேர்த்து தெரியப்படுத்தி உள்ளேன்.

*எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை ஏழை, எளிய மக்கள் முன்னேற்றத்திற்காக பயன்படுத்துவேன். அதுவே எனது லட்சியம் .

*நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல்தான மிகப் பெரும் தடைக்கல்.   நான் ஊழல் கரையோடு இருக்க மாட்டேன் என்பதை வெளி்ப்படுத்தும் வகையில்தான் இந்த சொத்துக் கணக்கு விவர வெளியீட்டுள்ளேன். நான் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன்.. ( நன்றி பட்டாபட்டி வலைப்பூ)



நேர்மை மனிதர் சகயத்தின் சாதனைகள்:

 *அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், “தோழனாக’ மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.

*காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, “பெப்சி’ குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, “சீல்’ வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.

*கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், “சிண்டிகேட்’ முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, “செக்’ வைத்தார்.

*அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, “ரெய்டு’ நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

*சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.

*தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்’ என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, “இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்’ என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, “நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்’ என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.

*நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.

*இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், “லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!’

(நன்றி கல்விசோலை வலைப்பூ)

 ஆனந்த விகடனில் சகாயத்தின் பேட்டி:


 "என்னை கோயம்புத்தூருக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருந்த நேரம். என் பொண்ணு யாழினிக்கு அப்போ மூணு வயசு. திடீர்னு ஒருநாள் ராத்திரி அவ மூச்சுவிட சிரமப்பட்டா. ஹாஸ்பிடலுக்குத் தூக்கிட்டுப் போனா உடனே அட்மிட் பண்ணச் சொல்லிட் டாங்க. மாசக் கடைசிங்கிறதால கையில ஆயிரம் ரூபாய்கூட இல்லை. 

புது ஊரு. அறிமுகம் இல்லாத மனுசங்க. எனக்குக் கீழே வேலை
பார்க்குறவங்ககிட்ட கடன் கேட்கவும் சங்கடமா இருந்துச்சு. காஞ்சிபுரத்துல நான் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, எனக்கு நண்பரான ஒரு ஸ்கூல் டீச்சரும் அப்ப கோவைக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருந்தாரு. அவர்கிட்ட தயங்கிட்டே நாலாயிரம் ரூபாய் கடன் கேட்கவும், அரை மணி நேரத்துல
கொண்டுவந்து கொடுத்தார்.உடனே, குழந்தைக்கு ட்ரீட்மென்ட் ஆரம்பிச்சுட்டோம். ஆனா, சம்பளம் வாங்கினதும் அந்தக் கடனை அடைச்சதும்தான் என் மனசுல இருந்த பாரம் இறங்குச்சு!''

''நான் அந்த கோயம்புத்தூர் சம்பவத்தை ஏன் சொல்றேன்னா... அப்ப என் கன்ட்ரோல்ல 650 மதுபானக் கடைகள் இருந்தன. லைசென்ஸ் புதுப்பிக்க கடைக்குத் தலா 10 ஆயிரம் ரூபாய்னு கொடுக்கத் தயரா இருந்தாங்க. நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, அடுத்த அஞ்சாவது நிமிஷம் 65 லட்ச ரூபாய் என் வீடு தேடி வந்திருக்கும். ஆயிரம் ரூபாய்கூட கையில் இல்லாத, மகளுக்கு உடம்பு சரியில்லாத சூழ்நிலையில் மனநிலை என்ன மாதிரி இருக்கும்னு யோசிச்சுப்பாருங்க.

அதெல்லாம்தான் ஓர் அரசு அதிகாரியின் நேர்மைக்கான சோதனை. நேர்மையா இருக்குறதுல ஒரே ஒரு சிக்கல் மட்டும்தான். நாளுக்கு நாள் நமக்கு எதிரிகள் அதிகரிச்சுட்டே போவாங்க. அவங்களை மட்டும் சமாளிச்சுட்டாப் போதும்!'' - தடதடக்கும் வார்த்தைகளில் கொப்பளிக்கிறது உற்சாகம்.


காஞ்சிபுரத்துல டி.ஆர்.ஓ-வா இருந்தப்ப ஒரு பெரியவர் தான் வாங்கிய பெப்சியில் அழுக்குப் படலம் இருந்ததாகப் புகார் கொடுத்தார். சாம்பிளை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பினதுல, 'மனிதர்கள் குடிக்க ஏற்ற பானமில்லை'ன்னு ரிப்போர்ட் வந்தது. சட்டப்படி அந்த நிறுவனம் மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்னு ஒரு அறிக்கை தயாரிச்சேன். ரொம்ப யோசனைக்குப் பிறகு தாசில்தார்கிட்ட எட்டு பூட்டு மட்டும் வாங்கிட்டு வரச் சொன்னேன். எதுக்குன்னு புரியாம வாங்கிட்டு வந்தவரைக் கூட்டிக்கிட்டு மதுராந்தகத்துல இருக்குற பெப்சி கம்பெனிக்குப் போனேன்.

நான் தயாரித்த அறிக்கையின் ஒரு நகலை கம்பெனி மேனேஜர்கிட்ட கொடுத்துட்டு, 'கம்பெனியைப் பூட்டி சீல்வைக்கப் போறோம். எல்லாரையும் வெளியே வரச் சொல்லுங்க'ன்னு சொன்னோம். அந்த மேனேஜரைவிட என்கூட வந்த தாசில்தார் ஆடிப் போயிட்டாரு. 'சார்... பெரிய பிரச்னை ஆயிடும். எதுக்கும் கலெக்டரை ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்'னு பதறுனாரு. 'கலெக்டரைக் கேட்டா சீல்வைக்க விட மாட்டாரு.

சட்டப்படி இந்தக் கம்பெனியை மூட நமக்கே அதிகாரம் இருக்கு. நீங்க தைரியமா உங்க கடமையைச் செய்யுங்க'ன்னு அவரை உள்ளே அனுப்பினேன். ஒரு மணி நேரம் கழிச்சு இன்னும் பதற்றத்தோடு வெளியே வந்தவரு, 'சார்... அவங்க அமெரிக்கா வரைக்கும் பேசுறாங்க சார்.
சி.எம்-கிட்ட பேசுறதாச் சொல்றாங்க சார். என்ன பண்ணலாம்?'னு கேட்டாரு. 'உள்ளே இருக்கிறவங்களை அரெஸ்ட் பண்ணிட்டு சீல்வைக்க வேண்டியதுதான்'னு நான் சொல்லவும்தான் எல்லாரும் பயந்து வெளியே வந்தாங்க. கம்பெனியை இழுத்து மூடி, எட்டு பூட்டுகளையும் போட்டு
சீல்வெச்சுட்டோம்.

நான் உடனே அலுவலகத்துக்குப் போகாம ஒரு குக்கிராமத்துக்குப் போயி ரேஷன் கடை, பள்ளிக்கூடத்தை எல்லாம் ஆய்வு பண்ணி முடிச்சுட்டு, ராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தேன்.  மனைவி வாசல்லயே காத்துட்டு இருந்தாங்க. கலெக்டர், சீஃப் செக்ரெட்டரி, உள்துறைச் செயலாளர்னு பலரும் என்னைக் கேட்டு வீட்டுக்கு போன் பண்ணி இருக்காங்க. நான் திரும்ப எல்லோருக்கும் போன் பண்ணா, 'யாரைக் கேட்டு சீல்வெச்சீங்க? என்ன காரியம் பண்ணியிருக்கீங்க
தெரியுமா?'ன்னு எல்லாரும் கேள்வி கேட்டாங்க.

'நான் என் கடமையைத் தான் சார் செஞ்சேன். மக்களுக்கு நல்லது செஞ்சதுக்காக சஸ்பெண்ட் பண்ணா, தாராளமாப் பண்ணிக்கோங்க'ன்னு சொல்லிட்டேன்.  மறு நாள் எந்தப் பத்திரிகைலயும் பெட்டிச் செய்தியாக்கூட பெப்சிக்கு சீல்வெச்ச சம்பவம் ரிப்போர்ட் செய்யப்படவே இல்லை. ரெண்டு நாள் கழிச்சு ஜூனியர் விகடன்ல மட்டும் அந்தச் செய்தி விரிவா வந்திருந்தது. அதுக்குப் பிறகுதான் பெப்சிக்கு நான் சீல்வெச்ச விஷயமே வெளி உலகத்துக்குத் தெரிஞ்சது.

இதுவரை 15 இடங்களுக்கு என்னை மாத்தி மாத்திப் பந்தாடிட்டாங்க. இப்போதான் முதன்முதலா நாமக்கல் மாவட்டத்துக்கு கலெக்டர் ஆகியிருக்கேன். மாவட்டம் முழுக்க ஒரு கோடி மரக் கன்றுகள் நடத் திட்டமிட்டு, ஏழு லட்சம் மரக் கன்றுகளை நட்டாச்சு. அவற்றின் முறையான பராமரிப்புக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு.

இன்னும் 10 வருஷத்துல அதிக மரங்கள் உள்ள மாவட்டமாக நாமக்கல்
இருக்கும். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் விவசாயிகளை, 'குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வா'ன்னு ஒவ்வொரு மாசமும் கலெக்டர் ஆபீசுக்கு அலைக்கழிக்கிறது நல்லாவா இருக்குன்னு நானே விவசாயிகளைத் தேடிப் போக ஆரம்பிச்சேன். ஒருநாள் ராத்திரி முழுக்க அந்தந்த கிராமத்துலயே தங்கி, அவங்க குறைகளை வாழ்ந்து பார்த்துட்டு வருவேன். அப்பதான் அவங்க சொல்றதுக்கு முன்னாடியே அவங்க குறைகள் என்னன்னு நாமளே உணர முடியும்!'' என்கிற சகாயம், தன் மகள் யாழினியை மடியில் வைத்துக்கொண்டு, ''சொல்லுடா குட்டி... உயர உயரப் பற... 
வானம் வசப்படும்!'' என சொல்லிக் கொடுக்கிறார். ( நன்றி ஆ.வி)

நாமக்கலுக்கு பிறகு மதுரையை ஆட்டியவர்களை தேர்தல் சமயத்தில்
ஆட்டிய பெருமை நம்ம சகாயத்தை சேரும்.  தேர்தலுக்காக சிறப்பு கலெக்டராக பணியேற்ற சகாயம் இன்று வரை மதுரையை சுத்தபடுத்தி கொண்டிருக்கும் இரும்பு மனிதர் என்றே சொல்லலாம்.( எவ்வளவு
இடைஞ்சல் பண்ணுன்ங்க..).

அனைத்து கலெக்டர்களும் சொத்து மதிப்பை கட்ட தயங்கிய நேரத்தில்
தன்னுடுய சொதுமதிப்பை வெளியிட்டு தமிழகத்தில் தனது சொத்து விபரப் பட்டியலை வெளியிட்ட முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெருமையை பெற்றார்.


சொத்து மதிப்பு: மதுரை மாவட்டம், மதுரை  தாலுகா ஆரப்பாளையம் கிராமத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 7,172 உள்ளது. மேலும், எல்.ஐ.சியில் கடன் உள்ளது. அந்த கடனை செலுத்தி வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் சகாயம்.
(நன்றி படுகை.காம் )

இன்று செய்தித்தாள்களை பார்க்கும் புதிது புதிதாய் எதாவது செய்து
மதுரையில் பரபரப்பாய் ஜொலித்துவரும் இந்த புதுகை நட்சத்திரம் எடுத்த
காரியத்தில் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அடுத்த அதிசயத்தில் சந்திப்போம்....

7 comments:

  1. INTHA MATHIRI MAKKALIN KURAIGALAI KETTU SARI SEYYUM ADHIGARI ETTHANAI PER IRUKKIRAARGAL NAM NAATTIL
    IVARGALAL THAAN INTHA ULAGAM INNUM SULANTRU KONDU IRUKKIRATHU.......
    GOD BLESS HIM

    ReplyDelete
  2. election nerathil madurai yil ivar eduttha action anaithum,
    pepar l padithen,migavum thunichala manithar,anaithu adhigarikalukkum ivar mun madhiri yaga seyal padugirar.vaalga pallandu.

    ReplyDelete
  3. புதுக்கோட்டையில் பிறந்து தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துவரும்
    நம் சகாயம் அய்யா வழியில் இன்றைய இளைஞர்கள் புதிய சமூகம் படைப்பர்
    அரிய பதிவுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. புதுக்கோட்டையில் பிறந்து தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துவரும்
    நம் சகாயம் அய்யா வழியில் இன்றைய இளைஞர்கள் புதிய சமூகம் படைப்பர்
    அரிய பதிவுக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. namudiya thalaivan...................

    ReplyDelete